Saturday, December 23, 2006

தன்னம்பிக்கையின் மனித வடிவம்

3 மாதத்திற்கு முன் புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா ஒன்றிற்கு செல்ல நேரிட்டது. அதில் நான் சந்தித்த ஒரு கண்தெரியாத நண்பரைப்பற்றிய ஒரு நினைவு.

ரு கண்தெரியாத மாணவர் ஒருவரை இன்னொரு மாணவர் அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார். எனக்கு குறிப்பு எழுதுவதற்கு பேப்பர் தேவைப்பட்டதால் அந்த கண்தெரியாத மாணவர் வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து கிழித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அவர் அருகே சென்று அமர்ந்தேன்.

அவரிடம் மெல்ல கேட்டேன். "உங்க நோட்டிலிருந்து சில பேப்பர்ஸ் தரமுடியுமா? நான் கொஞ்சம் குறிப்பெடுக்க வேண்டும்"

அவரும் "இதோ கிழித்துக்கொள்ளுங்கள் ஆனால் பிசிறில்லாமல் இருக்கட்டும் " என்று நோட்டுப்புத்தகத்தை தந்தார். பிசிறில்லாமல்..எவ்வளவு சுத்தமான தமிழ்..

நோட்டுப்புத்தகத்தை திறந்தபொழுது எழுதப்பட்டுள்ள கவிதைகள் என்னைக் கவர்ந்தது.

நீங்க கவிதை எழுதுவீங்களா.?

"ஆமா கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன்..மனசுல தோன்றியதை யாரிடம் சொல்லமுடியும்..ஆகவே என் மனதின் வடிகால் கவிதை" என்று கூறினார்

வரைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இன்னமும் அதிகமாயிற்று. "படிக்கலாமா" என்று அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன். கவிதைகள் புரிவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.

அதில் ஒரு கவிதை இதோ:

காலம் தன்னை
நீட்டியும் குறுக்கியும்
பாதை எங்கிலும் விரிய

இவ்வளவு பொய்க்காசுகள்
எப்படியோ இவர்களால்
அள்ளி வரமுடிகிறது

கலை ததும்பும்
சித்திரக்கோட்டைகளை
அப்பட்டமாக பேரம்பேசும்
சில்லறைப்பேச்சுகளை
பதியம் போட்ட
எனது ப்ரியமான ஏடுகளை
எந்த நிபந்தனையும் அற்ற
தீயிடம் சமர்ப்பிக்கின்றேன்

இப்படிக்கு
சாம்பல் தூதன்


அவரிடம் மெல்லக் கேட்டேன்.

இந்தக் கவிதைக்கு அர்த்தம் என்ன என்று?

"விதை எனக்கும் உலகத்திற்கும் உள்ள விசயம். உலகம் என்னை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை கவிதையின் மூலமாக வெளிப்படுத்துகின்றேன் " என்றார்.

சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கிறாரா இல்லை எனக்குத்தான் அவர் சொல்வது புரியவில்லையா? என்று தெரியாமல் பக்கத்தில் உள்ள நண்பர் ஷாபியிடம் கேட்டேன்.

" என்ன ஷாபி ? இந்தக் கவிதையின் அர்த்தம் என்ன..? "

"எல்லாருமே பொய்யர்களாகவே இருக்கின்றார்கள். யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை " என்பதைத்தான் இந்தக்கவிதையில் சொல்லியிருக்கின்றார் என்று சுருக்கமாக கூறி முடித்துவிட்டார்.

நீங்க எங்க படிக்கிறீங்க..?

ரமேஷிடம் மெல்லக் கேட்டேன்..
"எம்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில்கின்றேன் என்றார்"

ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா..?

"ம் இரவின் உயரம் என்ற ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றேன்.."


அப்பொழுது விழா ஆரம்பிப்பதற்குண்டான சலசலப்புகள் அதிகமாகியதால் அவரிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டு விழாவில் கவனம் செலுத்தினேன்.

விழா முடியும் தருவாயில் அந்த கண்தெரியாத மாணவர் ரமேஷ் என்னிடம் தன்னை வாசற்படி வரை கொண்டு வந்து விடுமாறு கேட்டுக்கொள்ள நான் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவரிடம் ஒரு சின்ன பேட்டி.

உங்க வீட்டுல எத்தனை பேர்?

"3 பேருங்க 1 அண்ணன் 1 தம்பி"

அவங்க என்ன பண்றாங்க?

"அண்ணன் டாக்டர் -- தம்பி ஊர்ல படிக்கின்றான்"

பெற்றோர்?

"அப்பா கோழி வியாபாரம்
அம்மா பால் வியாபாரம்
நான் புத்தக வியாபாரம்"

ஏன்? அப்பா அம்மா பணம் அனுப்ப மாட்டாங்களா?

"அவங்க கை அந்த அளவுக்கு நீளமில்லை "( அழகாய் பதில் அளித்தார்)

நீங்க ஊர்லையே இருக்க வேண்டியதுதானே?

"பெற்றோர்கள் உதவுவதே இல்லை. அவர்களுக்கு சரியான திட்டமிடுதல் கிடையாது. அவர்கள் தேடலில் மூழ்கி விட்டார்கள் . பொறுப்பில்லை "

என்று பதில் சொல்லிக்கொண்டே வந்தவர் தேவநேயப்பாவாணர் நூலகத்தின் வெளியே வந்ததும் "நீங்க போங்க சார் நான் இனிமேல் போயிருவேன் " என்றர்.

"இல்லை ரோட்டை க்ராஸ் பண்ணித்தானே போகனும். நான் அந்த பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து விடுறேன்" என்று கூறி பேட்டியை தொடர்ந்தேன்.

"அப்பப்ப பணம் அனுப்புவாங்க..யு. ஜி வரைக்கும் படிக்க வச்சாங்க..அதுக்குப்புறம் நான்தான் பார்த்துக்குறேன்.."

"வீட்டுக்குப் போனா சாப்பாடு கிடைக்கும். ஆனா மரியாதை...?"

என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதை கண்ணீரோடு கவனித்தேன்.
அப்ப அண்ணன் டாக்டர்னு சொன்னீங்க..?

"ஆமா..கண் தெரியாத எனக்கு செலவழிச்சா நான் காப்பாத்துவேனான்னு அவர்களுக்கு சந்தேகம் . அதனால அண்ணனை மட்டும் படிக்க வச்சாங்க.."

"அவனுக்கு அங்க கடன் அதிகம் .. அவன் பணம் அனுப்ப முடியாது.."

"என்செலவுக்கு நானே உழைக்கின்றேன். நாம பெரியாரோட சுயமரியாதை புத்தகமெல்லாம் படிக்கின்றோம் மத்தவங்கிட்ட கைநீட்ட முடியுமா..? சுயமரியாதை என்னாகுறது..?" என்று தான் வார விடுமுறையில் இரயிலில் புத்தகம் விற்பதாக கூறினார்.

அவரை கைப்பிடித்து அழைத்து வரும்பொழுது வாசற்படிகளிலும் சாலையிலும் இரண்டு முறை தடுமாறி விழப்பார்த்தேன் நான்.

அவரோ "பார்த்து வாங்க சார் இங்கே ஒரு மேடு இருக்கும்" என்று என்னிடம் கூறி என்னை பார்வையில்லாதவனாக்கினார். அவர் என் கைப்பிடித்தாலும் வெகு அலட்சியமாக நடந்து வந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.


பேருந்து நிலையம் வந்ததும் கூட்ட நெரிசல் உள்ள ஒரு பேருந்தில் அவரை ஏற்றிவிட அவர் நான் நின்றிருந்த திசையை நோக்கி டாட்டா காட்டிவிட்டு சென்றுகொண்டிருந்தார்.

எனக்கு நம்பிக்கை என்ற வார்த்தைகள் முழு உருவமாகி விழாவுக்கு வந்து விட்டு
சென்றதைப் போல ஒரு உணர்வு.


இதுதான் அவருயை தொலைபேசி எண்
"மு. ரமேஷ் - 9942191838 . "

யாரேனும் எந்த வகையிலாவது அவருக்கு உதவ முடிந்தால் உதவுங்களேன்.

அவருடைய கவிதைக்கு வாழ்த்தோ அல்லது தனியாக இரயிலில் புத்தகம் விற்று சம்பாதிக்கும் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டியோ பேசுங்களேன். அவர் கொஞ்சம் உற்சாகமடையக்கூடும்.

- ரசிகவ் ஞானியார்


2 Comments:

said...

சுயமரியாதை என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டதோ என நான் சில சமயம் நினைப்பதுண்டு( நம் தலைவர்கள் அதை அடிக்கடி பயன்படுத்துவதால்)!

அனால், அது ரமேஷ் போன்றவர்களால் இன்னும் உயிருடன் உலவிக்கொண்டிருப்பதை நினைத்தௌ மகிழ்ச்சி அடைகிறேன்!

பதிவு போட்ட நண்பருக்கு நன்றி!

4:07 PM  
said...

//அனால், அது ரமேஷ் போன்றவர்களால் இன்னும் உயிருடன் உலவிக்கொண்டிருப்பதை நினைத்தௌ மகிழ்ச்சி அடைகிறேன்!
//

உண்மைதான் நண்பரே..

4:12 PM  

Post a Comment

<< Home